கிணறுகளில் இரண்டு மர்ம சடலங்கள் கயிறால் கட்டப்பட்ட கை கால்கள்

சத்தீஸ்கர் துர்க் மாவட்டத்தின் கமாரியா கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை கிராமத்தின் இரண்டு கிணறுகளில் ஒன்றிலிருந்து நீர் எடுக்கச் சென்ற பெண் ஒருவருக்கு, கடுமையான துர்நாற்றம் வீசியது. உடனடியாக கிராம மக்களுக்கும், அமலேஷ்வர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாரும், நீர்மூழ்கி வீரர்கள் மூலம் 10-12 வயதுடைய சிறுவனின் சடலம் ஒன்று துணியால் சுற்றப்பட்டு, மூட்டையாக கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. சிறுவனின் கை-கால்கள் கயிறால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, முதல் கிணற்றில் இருந்து வெறும் 30 மீட்டர் தொலைவில் உள்ள இரண்டாவது கிணற்றிலும் ஒரு மூட்டை கிடப்பதாக தகவல் கிடைத்தது. இரண்டாவது கிணற்றிலும் போலீஸார் தேடுதல் நடத்தியதில், 30-35 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மூட்டையாகக் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அந்தப் பெண்ணின் சடலமும் சிறுவனைப் போலவே கட்டப்பட்டிருந்ததுடன், மூட்டையில் கற்கள் கட்டப்பட்டிருந்தன. எஸ்எஸ்பி விஜய் அகர்வால், இரண்டு சடலங்களும் ஒரே மாதிரியாகக் கட்டப்பட்டு வீசப்பட்டிருப்பதாகவும், இது இரண்டும் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, சடலங்களின் அடையாளத்தை அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.