உரி எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை இந்திய பாதுகாப்புப் படையினர் அதிரடியாக சுட்டுக்கொன்றனர். மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிக்கும் வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த பாகிஸ்தான் பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.
கொல்லப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் எல்லைப் பகுதியில் தற்போது பெரும் பரபரப்பும் பலத்த பாதுகாப்பும் நிலவுகிறது.