ஈரான் கடற்படை தளபதி அலிரேசா தங்க்சிரி கொல்லப்பட்டதால் போர்க்களத்தில் உச்சகட்ட பதற்றம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிக் காவல் படை (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா தங்க்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து பந்தர் அப்பாஸ் துறைமுகப் பகுதியில் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை இரு நாட்டு ராணுவத் தரப்பிலிருந்தும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், உறுதிப்படுத்தப்பட்டால் இது போரின் மிக முக்கிய இழப்பாகக் கருதப்படும்.
சர்வதேச எரிசக்தி போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதில் தளபதி தங்க்சிரி முக்கியப் பங்காற்றினார். ஏற்கனவே ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது கடற்படைத் தளபதியின் மரணம் மத்திய கிழக்கில் பெரும் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளன. கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த திடீர் தாக்குதல்கள், உலகளாவிய எண்ணெய் சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. தங்க்சிரியின் மறைவு ஈரானிய ராணுவத்தின் அடுத்தகட்ட நகர்வுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.