இங்கிலாந்தில் ‘மகன்’ ஆசைக்காக பெண் கருக்களை கலைக்கும் இந்திய வம்சாவளியினர்! பரபரப்பு ரிப்போர்ட்

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பங்களில் பாலினத் தேர்வின் அடிப்படையில் கருக்கலைப்பு (Sex-selective abortion) செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஹெல்த் இம்ப்ரூவ்மென்ட் அண்ட் டிஸ்பேரிட்டீஸ் (Health Improvement and Disparities) நடத்திய ஆய்வின்படி, 2017 மற்றும் 2021-க்கு இடையில், இந்திய வம்சாவளி குழந்தைகளில் மூன்றாவது அல்லது அதற்கு மேற்பட்ட பிறப்பு வரிசையில், 100 பெண் குழந்தைகளுக்கு 112 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இது சாதாரண வரம்பான 107-ஐ விட அதிகமாகும். இதன் மூலம், சிலர் கருக்கலைப்பு மூலம் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தெளிவாகிறது.
இந்த பகுப்பாய்வின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பங்களில் சுமார் 400 பாலின-தேர்வு கருக்கலைப்புகள் நடந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பாலினத் தேர்வின் அடிப்படையில் செய்யப்படும் கருக்கலைப்பு சட்டவிரோதமானது, என்று இங்கிலாந்து அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர், பாலினம் ஒருபோதும் கருவுறுதலை நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ அடிப்படையாக இருக்க முடியாது என்றும், இந்த காரணத்திற்காக கருக்கலைப்பு செய்யும் எந்த மருத்துவரும் குற்றவாளியே என்றும் எச்சரித்துள்ளார்.