ஆடுஜீவிதம் பாணியில் கடத்தப்பட்ட இந்தியர்கள்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மூன்று இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புக்காக விசா பெற விரும்பி, ஒரு தனியார் விசா ஏஜெண்ட்டை அணுகியுள்ளனர். இந்த ஏஜெண்டின் வழியே அவர்கள் முதலில் துபாய் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். துபாயில் இருந்து சட்டவிரோதமாக, கடுமையான சூழ்நிலைகளில் கழுதை மீது பயணம் செய்து அவர்கள் ஈரானுக்கு கடத்தப்பட்டனர். இது ஆடுஜீவிதம் திரைப்படத்தை நினைவூட்டும் ஒரு உண்மை சம்பவமாகும்.
ஈரானில் அவர்கள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு வங்கிக்கணக்கில் தலா ₹18 லட்சம் பணம் செலுத்துமாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்கும் பணியில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோத மனிதக் கடத்தலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.