“அமைச்சர் சிபாரிசு செய்தால் கேரியர் காலி!” – இளம் பாடகர்களுக்கு விஷால் தத்லானி கடும் எச்சரிக்கை

“அமைச்சர் சிபாரிசு செய்தால் கேரியர் காலி!” – இளம் பாடகர்களுக்கு விஷால் தத்லானி கடும் எச்சரிக்கை

பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி, தனது அதிரடியான பேச்சால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பவர். தற்போது திரைத்துறையில் நிலவும் ‘சிபாரிசு கலாச்சாரத்திற்கு’ எதிராக அவர் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபாரிசு செய்தால் பிளாக் தான்!

பிப்ரவரி 9, திங்கள்கிழமை அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷால் தத்லானி ஒரு முக்கிய குறிப்பைப் பகிர்ந்துள்ளார். அதில், “வளர்ந்து வரும் பாடகர்களுக்கு ஒரு அறிவுரை. எந்தவொரு அமைச்சரிடமிருந்தோ அல்லது அவர்களின் செயலாளர்களிடமிருந்தோ எனக்கு போன் செய்யச் சொல்லாதீர்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி என்னைச் சந்திக்கவோ அல்லது வாய்ப்பு பெறவோ முயற்சிப்பவர்கள் மீது எனக்கு ஒரு துளி கூட மரியாதை கிடையாது,” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஒரு பாடகர் அமைச்சரின் பரிந்துரையுடன் அவரை அணுக முயன்றதாகவும், உடனடியாக அந்த பாடகரை தான் ‘பிளாக்’ செய்ததாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு திறமையான பாடகராக இருந்தாலும், சிபாரிசுடன் வந்தால் அவர்களுடன் ஒருபோதும் பணியாற்றப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

விஷாலின் தற்போதைய பயணம்

தற்போது ‘இந்தியன் ஐடல்’ சீசன் 16-ல் ஸ்ரேயா கோஷல் மற்றும் பாட்ஷாவுடன் இணைந்து நடுவராக பணியாற்றி வரும் விஷால், இசையில் மட்டுமல்லாமல் கொள்கையிலும் தான் ஒரு ‘கெட்டிக்காரன்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான தெலுங்கு பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற விஷால் தத்லானியின் இந்த முடிவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *