‘அன்னை கங்கை தாமே வந்துள்ளார்’! வெள்ளம் பாதித்த கிராமத்தில் யோகி அமைச்சரின் விசித்திரமான கருத்து

தொடர் மழை காரணமாக உத்தரபிரதேசத்தில் 17 மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், மாநில அரசின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உள்ள அலட்சியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் கோபம் அதிகரித்துள்ளது. சமீபத்தில், கான்பூரில் வெள்ளம் பாதித்த கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் சஞ்சய் நிஷாத், அங்கு நிவாரணம் கிடைக்காதது குறித்த புகார்களுக்கு விசித்திரமான பதில் அளித்தார்.
சஞ்சய் நிஷாத், “அன்னை கங்கை தாமே வந்துள்ளார், அவரது தரிசனம் குழந்தைகளுக்கு சொர்க்கத்தை அளிக்கும்” என்று கூறினார். அமைச்சரின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் தோல்விகளை மறைக்க மத உணர்வுகளைப் பயன்படுத்துவதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தகைய இயற்கை பேரழிவை தெய்வங்களுடன் ஒப்பிடுவது பலத்த விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.