அடல் சேதுவில் விரிசல், ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம்

மும்பை மெட்ரோபாலிட்டன் ரீஜியன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (எம்.எம்.ஆர்.டி.ஏ) புதிதாக திறக்கப்பட்ட அடல் சேது பாலத்தின் மேற்பரப்பில் சேதம் ஏற்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. ரூ.17,840 கோடி செலவில் கட்டப்பட்ட, 21.8 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாலம், ஜனவரி 12, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துள்ளது.
எம்.எம்.ஆர்.டி.ஏ.வின் ஆய்வுக்கு பிறகு, புது மும்பை நோக்கி செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மேற்பரப்பு சேதம் ஏற்பட்டதாகவும், இதற்கு பருவமழை மற்றும் அதிக போக்குவரத்து காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. சேதமடைந்த பகுதியை ஐந்து நாட்களுக்குள் சரி செய்யுமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறினால், மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்தாரிட்டி எச்சரித்துள்ளது.