BREAKING: PSLV C-61 திட்டம் தோல்வி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. EOS-9 என்ற அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்த PSLV C-61 ராக்கெட் திட்டம் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை சரியாக 5.59 மணிக்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்த சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் திட்டம் தோல்வியடைந்தது இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர். நாராயணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கு வெற்றிகரமாக பிரிந்தவுடன் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயற்கைக்கோளை சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த தோல்விக்கான காரணங்களை கண்டறிய இஸ்ரோவின் உயர்நிலைக் குழு உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நேராமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்தத் தோல்வி இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்ந்து புதிய சாதனைகளை படைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.