முத்திரைத் தாளுக்கு மாற்றம்: தமிழகத்தில் இ-ஸ்டாம்பிங் நடைமுறை விரைவில் அமலுக்கு வரலாம்

தமிழகத்தில் சொத்து மதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பத்திரப்பதிவின் போது பயன்படுத்தப்படும் முத்திரைத் தாளுக்குப் பதிலாக, இ-ஸ்டாம்ப் என்ற மின்னணு முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனால் முத்திரைத் தாள்களைப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு முடிவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 575 பதிவுத்துறை அலுவலகங்களில், தற்போது 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாள்கள் பிரதானமாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் சில நேரங்களில் உயர்ந்த தொகைக்கான முத்திரைத் தாள்களைப் பெறுவது சிக்கலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கும் வகையில், ஆன்லைன் முறையில் “இ-ஸ்டாம்ப்” என்ற முத்திரைச் சான்றிதழ் சேவையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முறையின் மூலம், முத்திரைத் தாள்கள் வாங்குவதைத் தவிர, நேரடியாக இணையதளத்தில் கட்டணத்தை செலுத்தி, அந்தக் கணக்கில் இருந்து முத்திரைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த முறை பாதுகாப்பாகவும், வசதியாகவும் அமையும்.
மேலும், பெண்கள் பெயரில் சொத்து வாங்கும்போது 1% முத்திரைத் தீர்வை குறைவு என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கு கூடுதலாக, புதுச்சேரியில் உள்ள போன்று, தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 50% முத்திரைத் தீர்வை விலக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இந்த புதிய இ-ஸ்டாம்பிங் நடைமுறை விரைவில் செயல்பாட்டுக்கு வருமென அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.