பாரதியார் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் – பொதுமக்களில் பரபரப்பு

பாரதியார் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் – பொதுமக்களில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதியார் பிறந்த இல்லம், எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை பராமரித்து வரும் இந்த இல்லத்தில், பாரதியார் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவரது வாழ்க்கைக் குறிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பார்வை நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், பிறகு மாலை 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுகிறது.

நேற்று மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிந்ததும், பாதுகாவலர் மகாதேவி கதவுகளை அடைத்த பின்னர், இல்லத்தின் முன்பகுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் கீழ்தளமும் சேதமடைந்தது. சில மேசை, நாற்காலிகள் சேதமடைந்தன. பாதுகாவலர் அவசரமாக வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த வட்டாட்சியர் சுபா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பாரதியார் இல்லம் உள்ளிட்ட 17 முக்கிய வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *