சிலிண்டர் சண்டையில் விபரீதம் திருமண நாளில் மகனை கொன்று தாய் தற்கொலை

ஐதராபாத் போரபண்டா பகுதியில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், கேஸ் அடுப்பில் வெந்நீர் வைத்தது தொடர்பாக மின் துறை ஊழியர் முரளி வேணுவுக்கும் அவர் மனைவி சத்தியவதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமண நாளன்று வெளியே அழைத்துச் செல்ல கணவன் மறுத்ததாலும், தொடர்ச்சியான சிடுமூஞ்சித் தனத்தாலும் விரக்தியடைந்த சத்தியவதி, தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த கோர சம்பவத்தில் 5 வயது சிறுவன் ருத்ரன் பரிதாபமாக உயிரிழந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 வயது பெண் குழந்தை தன்விகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்த போலீசார் சத்தியவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலைக்கு குடும்பத் தகராறுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என முரளி வேணுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.