ஷாக் நியூஸ்: மொபைலில் டிக்கெட் காட்டினால் அபராதமா? ரயில்வேயின் அதிரடி மாற்றம்!

ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இனி யூடிஎஸ் (UTS), ஏடிவிஎம் (ATVM) அல்லது கவுண்டர்களில் பெறப்பட்ட முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் மொபைல் ஸ்கிரீன்ஷாட்கள் செல்லாது; பயணிகள் கண்டிப்பாக அதன் அசல் காகித நகலை (Physical Copy) வைத்திருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி டிக்கெட்டுகள் தயாரிக்கப்படுவதைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே டிக்கெட்டில் பல பயணிகளின் விவரங்களை எடிட் செய்து மோசடி செய்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த மோசடிகளைக் கண்டறிய டிடிஇ (TTE) அதிகாரிகளுக்குப் பிரத்யேக மொபைல் செயலிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டிக்கெட்டிலுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து அதன் உண்மைத்தன்மையை உடனடியாகச் சரிபார்க்க முடியும். ஜான்சி மற்றும் குவாலியர் உள்ளிட்ட அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இ-டிக்கெட் மற்றும் எம்-டிக்கெட் தவிர மற்ற அனைத்து டிக்கெட்டுகளையும் காகித வடிவில் வைத்திருப்பது பயணத்தின் போது தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.