கியூபா கடலுக்கடியில் மர்மமான நகரம் கண்டுபிடிப்பு; இதுதான் அட்லாண்டிஸ் நகரமா?

கியூபா கடற்கரையில் கடலுக்கடியில் மர்மமான நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால், இது தொடர்பான புதிய யூகங்கள் எழுந்துள்ளன. 2001-ல், கியூபாவின் பினார் டெல் ரியோ மாகாணத்திற்கு அருகில் ஒரு ஆய்வுக் குழு, கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 2000 முதல் 2300 அடி ஆழத்தில் சோனார் கருவி மூலம் சில வினோதமான அமைப்புகளைக் கண்டறிந்தது. இந்த அசாதாரண வடிவ கற்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய ஒரு பழங்கால நகரத்தின் இடிபாடுகளாக இருக்கலாம் என அந்த குழு கருதியது.
சுமார் இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள இந்த மர்மமான அமைப்பு ‘கியூபாவின் நீருக்கடியில் உள்ள நகரம்’ என அறியப்படுகிறது. ஆரம்பக்கட்ட ஆய்வு அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்டாலும், கடந்த பதினாறு ஆண்டுகளில் இது தொடர்பாக புதிய ஆய்வுகளோ, பயணங்களோ மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இந்த கண்டுபிடிப்பின் மர்மம் மேலும் அதிகரித்துள்ளது. இது விஞ்ஞானிகளிடையே ஆர்வத்தை தூண்டி, அட்லாண்டிஸ் நகரத்தின் கதைக்கும் இதற்கும் உள்ள தொடர்பு குறித்து பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.