35 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த குழந்தை! கல் ஆனது தெரியாமல் வாழ்ந்த தாய்

அல்ஜீரியாவில் 73 வயது மூதாட்டியின் வயிற்றில் 35 ஆண்டுகளாக கல் போல் மாறிய கரு ஒன்று இருந்தது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘லித்தோபீடியன்’ (lithopedion) எனப்படும் இந்த அரிய நிலை, மூதாட்டிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டபோது கண்டறியப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில், சுமார் 2 கிலோ எடையுள்ள ‘குழந்தை கல்’ என அழைக்கப்பட்ட அந்த கரு, வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற அரிய நிகழ்வு, கருப்பையில் வளர வேண்டிய கரு, வயிற்றின் உள்ளே வளர்ந்து, போதிய ரத்த ஓட்டம் இல்லாததால் வளர்ச்சி நின்று, பின்னர் படிப்படியாக கல்லாக மாறும் போது ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மூதாட்டிக்கு கடந்த காலங்களில் அவ்வப்போது வயிற்று வலி இருந்தும், அதற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. சமீபத்தில் வலி அதிகமானதால், விரிவான பரிசோதனை மேற்கொண்ட போது இந்த அரிய நிகழ்வு தெரியவந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்தவித தீவிர பாதிப்பும் இன்றி ‘குழந்தை கல்’ வயிற்றில் இருந்தது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.