ஆவணத்தை ஏற்க மறுத்த வட்டாட்சியர், நாயிடம் கொடுத்த காங்கிரஸ் கட்சியினர்; மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

மத்தியப் பிரதேச மாநிலம், கட்னி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வித்தியாசமான போராட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பர்வாரா வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு உள்ளூர் பிரச்சினைகள் குறித்து மனு அளிக்கச் சென்றனர். அலுவலகத்தில் கோஷமிட்டதற்கு வட்டாட்சியர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வட்டாட்சியர் மனுவை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர், தங்கள் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தினர். மனுவை ஏற்க வட்டாட்சியர் மறுத்ததால், அலுவலக வளாகத்தில் சுற்றித் திரிந்த ஒரு நாயிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தங்கள் பகுதியில் நிலவும் மின்வெட்டு, உரம் பற்றாக்குறை, மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாதது போன்ற முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.