15 நாள் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த கொடூரம்; ஆடு மேய்த்த சிறுவனால் காப்பாற்றப்பட்ட அதிசயம்

உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில், 15 நாள் பச்சிளம் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பஹ்குல் நதிக்கரையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கண்டுபிடித்தான். உடனடியாக, அவன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த காவலர்கள் குழந்தையை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்தக் குழந்தை தற்போது ஷாஜஹான்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தையின் உடல் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், எறும்புக் கடியால் பல காயங்கள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் விரல்கள் பிறவியிலேயே ஒட்டியுள்ளன. இந்த மனிதாபிமானமற்ற செயலைச் செய்தவர்களைக் கண்டறிய காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.