நிமிஷா பிரியா தூக்கு தண்டனை ஒத்திவைப்பு, உயிரிழந்தவரின் சகோதரர் அதிர்ச்சித் தகவல், ‘தலால் நிமிஷாவின் இரண்டாவது கணவர்’

யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் ஜூலை 16 அன்று நடைபெறவிருந்த தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிக நிவாரணத்திற்கிடையே, நிமிஷா பிரியா மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தலால் அப்தோ மஹதியின் சகோதரர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். தலால் மற்றும் நிமிஷா திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை கணவன்-மனைவியாக வாழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். நிமிஷாவை மன்னிக்க மறுத்த அவர், தங்கள் குடும்பம் எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லை என்றும், ‘இறைவனின் சட்டப்படி’ தண்டனை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன், நிமிஷாவின் குடும்பத்தினர், தலால் அவரது கடவுச்சீட்டைப் பறித்துக்கொண்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், தலாலின் சகோதரர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த பயிற்சி பெற்ற செவிலியரான நிமிஷா பிரியா, 2011 ஆம் ஆண்டு டாமி தாமஸை மணந்த பிறகு வேலைக்காக யேமன் திரும்பினார். பின்னர் ஒரு தனியார் கிளினிக்கைத் திறப்பதற்காக தலாலுடன் கூட்டாளியானார்.