8வது ஊதியக் குழு அறிவிப்பு வெளியீடு! அகவிலைப்படி இணைப்பு குறித்து அரசின் முக்கிய விளக்கம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த 8வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நவம்பர் 3, 2025 அன்று இக்கமிஷன் அறிவிக்கப்பட்டதுடன், நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் புலக் கோஷ் மற்றும் பங்கஜ் ஜெயின் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இந்த அறிவிப்பானது, ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
இதற்கிடையில், அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை அடிப்படை ஊதியத்துடன் (Basic Salary) இணைப்பது குறித்த வதந்திகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பாராளுமன்றத்தில் அளித்த பதிலில், டி.ஏ. அல்லது டி.ஆர்-ஐ அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எந்தவொரு திட்டமும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெளிவுபடுத்தினார். அதாவது, டி.ஏ. 50% ஐத் தாண்டினாலும், அது தானாக அடிப்படை ஊதியத்துடன் இணையாது. இருப்பினும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் AICPI-IW குறியீட்டின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட விகிதத்தில் டி.ஏ. தொடர்ந்து வழங்கப்படும்.