4 வயது குழந்தையை பலிகொண்ட வேர்க்கடலை! விளையாடும்போது நிகழ்ந்த பெரும் சோகம்

உத்தரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத்தில் 4 வயது சிறுமி வேர்க்கடலை (Mungfali) உட்கொண்ட போது அது மூச்சுக்குழாயில் சிக்கியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூனி கிராமத்தைச் சேர்ந்த அனுஜ் கத்தேரியாவின் மகள் பலக் விளையாடிக் கொண்டிருந்தபோது வேர்க்கடலையை சாப்பிட்டாள், அப்போது ஒரு விதை அவளது தொண்டையில் சிக்கியது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிருக்குப் போராடியது. குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், பலக்கை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப பரிசோதனையில், வேர்க்கடலை விதை மூச்சுக்குழாயில் சிக்கியதால் குழந்தை மூச்சுத் திணறி இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். வேர்க்கடலை, கடலைப்பருப்பு, திராட்சை போன்ற சிறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த எதிர்பாராத சோக நிகழ்வால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.