1500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 3 மாதத்தில் 27 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு! மகாராஷ்டிராவில் அம்பலமான மெகா மோசடி

மகாராஷ்டிராவின் ஷெந்துருசானி கிராமத்தில் வெறும் 1,500 குடியிருப்பாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களில் 27,397 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடந்த இந்த பதிவுகளில் பெரும்பாலானவை மேற்கு வங்காளம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பெயர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு சிறிய கிராமத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த மோசடியின் பின்னணியில் மும்பையில் இருந்து கிராமத்தின் சிஆர்எஸ் ஐடியை முறைகேடாகப் பயன்படுத்திய கும்பல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஐடி சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க மாவட்ட அதிகாரிகளின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. போலிப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.