10 மாத கோமாவிற்கு பிறகு கண் விழித்த பெண் மடியில் தவழ்ந்த அதிசய குழந்தை

செய்தி பிரிவு : இத்தாலியைச் சேர்ந்த 37 வயதான கிறிஸ்டினா ரோஸி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாரடைப்பு ஏற்பட்டு 10 மாதங்கள் கோமா நிலைக்குச் சென்றார். அவர் கோமாவிற்குச் சென்றபோது கர்ப்பமாக இருந்தார், அவர் நினைவற்ற நிலையில் இருந்தபோதே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது சுயநினைவு திரும்பிய கிறிஸ்டினா, தான் ஏற்கனவே ஒரு தாயாகிவிட்டோம் என்ற இன்ப அதிர்ச்சியான செய்தியை அறிந்தார்.
கிறிஸ்டினாவின் கணவர் கேப்ரியல் சுசி கூறுகையில், தனது மனைவி மீண்டு வந்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்போது அவர் தனியார் கிளினிக்கில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதால் நிதி திரட்டி வருவதாக அவர் கூறினார். 10 மாதங்கள் கோமாவில் இருந்து மீண்டு தனது குழந்தையை சந்தித்த கிறிஸ்டினாவின் இந்த மீளுயிர்ப்பு அவரது குடும்பத்தினருக்கு ஒரு புதிய பிறவியாகவே கருதப்படுகிறது.