ஹார்முஸ் நீரிணை தடையை உடைத்து எல்பிஜி சிலிண்டர் எரிவாயுவுடன் இந்தியா திரும்பியது ஷிவாலிக் கப்பல்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணை வழியாக சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் எல்பிஜி ஏற்றி வந்த இந்திய கப்பல் ‘ஷிவாலிக்’ வெற்றிகரமாக குஜராத் முண்ட்ரா துறைமுகத்தை வந்தடைந்தது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் இந்த கடல்வழிப் பாதை முடக்கப்பட்டதால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இந்த கப்பலின் வருகை நாட்டின் எரிவாயு தட்டுப்பாட்டை போக்கி பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதே பாதையில் ‘நந்தாதேவி’ என்ற மற்றொரு பெரிய எரிவாயு கப்பலும் மும்பையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசின் உயர்மட்ட ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. நாட்டின் தினசரி எரிவாயு தேவையில் பெரும்பகுதி இறக்குமதியை நம்பியே இருப்பதால், இந்த விநியோகம் உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும் மிக அவசியமானதாக கருதப்படுகிறது.