வீட்டிற்குள் நுழைந்த கொடிய பாம்புடன் சண்டையிட்டு உரிமையாளரின் உயிரைக் காத்த நாய்கள்; ஷெரு மற்றும் கோகோவின் சோகமான முடிவு!

உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில், தங்கள் உரிமையாளரின் குடும்பத்தை கொடிய பாம்பிலிருந்து பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த இரண்டு செல்ல நாய்கள் தொடர்பான நெகிழ்ச்சியான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு அவுராய், ஜெயராம்பூரில் உள்ள டாக்டர் ராஜன் என்பவரது வீட்டிற்குள் ஒரு விஷப் பாம்பு நுழைய முயன்றதாகத் தெரிகிறது. வாயிலைக் காவல் காத்துக்கொண்டிருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த ஷெரு மற்றும் கோகோ ஆகிய இரு நாய்கள் உடனடியாக பாம்பைத் தாக்கின. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கடுமையான சண்டைக்குப் பிறகு, ஷெரு மற்றும் கோகோ இணைந்து சுமார் 5 அடி நீளமுள்ள அந்தப் பாம்பைக் கொன்று, அதை இரண்டாகக் கிழித்தன.
இருப்பினும், இந்தச் சண்டையின் போது நாய் இரண்டையும் பாம்பு கடித்துவிட்டது. நாய்களின் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டாரும் காவலாளியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், ஆனால் அதற்குள் தாமதமாகிவிட்டது. விஷப் பாம்பைக் கொன்ற சிறிது நேரத்திலேயே, ஷெரு மற்றும் கோகோ விஷம் காரணமாக மயங்கி விழுந்தன. இந்த இரண்டு விசுவாசமான நாய்களின் இழப்பால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் செயல், செல்லப் பிராணிகளின் விசுவாசத்துக்கு ஒரு மகத்தான உதாரணமாக அப்பகுதியில் பேசப்படுகிறது.