வீடுகளுக்கு இலவசமாக AC? TN அரசு தரப்பு அளித்த விளக்கம்

தமிழகத்தில் வீடுகளுக்கு இலவசமாக ஏர் கண்டிஷனர் (AC) வழங்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கோடைக்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் 5 நட்சத்திர ஏசி இலவசமாக வழங்க உள்ளதாக ஒரு தவறான செய்தி இணையத்தில் வேகமாக பரவியது. இந்த தகவல் பொதுமக்களிடையே குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) இந்த செய்தியை முழுமையாக மறுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவான TN Fact Check விரிவான விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையின் முடிவில், சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் வெறும் வதந்தி என்றும், அதில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. எனவே, அரசு இலவச ஏசி வழங்குவதாக யாராவது கூறினால் பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் என்றும், இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக அரசு செய்தி ஊடகங்களை மட்டுமே நம்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.