விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் நேரில் வந்த ஆதவ் அர்ஜுனா ஊர் மக்களால் அதிரடியாக விரட்டியடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனாவிற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என ஆவேசமடைந்த மக்கள் கூச்சலிட்டதால், செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு அவர் அங்கிருந்து வெளியேறினார். நேற்று சாலை மறியல் நடந்தபோது வராதது ஏன் எனவும் ஊர் மக்கள் கேள்வி எழுப்பினர்.
மாணவியின் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி கடந்த நான்கு நாட்களாகத் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகள் பிடிபடும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்பதில் கிராமத்தினர் உறுதியாக உள்ளனர், இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நீடிக்கிறது.