வந்தே பாரத் முதல் சாதாரண ரயில்கள் வரை பயண கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விலை பட்டியல்

இந்திய ரயில்வே இன்று டிசம்பர் 26 முதல் பயணக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. வந்தே பாரத், ராஜதானி, சதாப்தி, துரந்தோ மற்றும் அமிர்த பாரத் போன்ற முக்கிய ரயில்களுடன், சாதாரண ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, பொதுப் பெட்டிகளில் 215 கி.மீ தூரத்திற்கு மேல் பயணித்தால் கிலோமீட்டருக்கு 1 பைசாவும், ஏசி மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும் கட்டணம் உயர்கிறது. இன்று முதல் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த உயர்வு பொருந்தும்.
தூரத்தின் அடிப்படையில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. உதாரணமாக, 500 கி.மீ தூரம் பயணிக்கும் மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். அதே நேரத்தில், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயண சேவையை வழங்குவதற்காகவே இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.