வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் ஷெரீப் ஹாதி மரணத்தால் பற்றி எரியும் தலைநகர் டாக்கா

இன்குலாப் மஞ்ச் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதியின் மரண செய்தியைத் தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. நேற்று இரவு டாக்காவின் தன்பாண்டி 32-இல் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், செய்தி நிறுவனங்கள் மற்றும் கலாச்சார அமைப்பான ‘சாயாநாட்’ அலுவலகங்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிட்டகாங்கில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியின் இல்லமும் போராட்டக்காரர்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது, இது நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சாலைகள் அனைத்தும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் அல்லது காவல்துறை எங்கும் காணப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் தோல்வியே இந்த நிலைக்குக் காரணம் என்று பிஎன்பி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த ஹாதி உயிரிழந்த நிலையில், இன்று காலையும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்கள் மற்றும் போராட்டங்கள் நீடிக்கின்றன.