ரஷ்யாவில் வாட்ஸ்அப் தடை: புதினின் அதிரடி நடவடிக்கை! மெட்டாவிற்கு பேரிடி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல சமூக வலைதள செயலியான வாட்ஸ்அப் (WhatsApp) முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்க நிறுவனமான மெட்டாவிற்கு விழுந்த மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது.
தடையின் பின்னணி
ரஷ்ய சட்டங்களுக்கு மெட்டா நிறுவனம் மதிப்பளிக்கவில்லை என்றும், விதிகளை மீறுவதாகவும் மாஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், சட்ட நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தாலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மாற்று செயலி ‘MAX’
வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ரஷ்யாவின் உள்நாட்டு செயலியான ‘MAX’-ஐ பயன்படுத்துமாறு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை எளிதாக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இந்த ஆப் மூலம் பயனர்களைக் கண்காணிக்க முடியும் என விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ரஷ்ய அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
புவிசார் அரசியல் சூழல்
உக்ரைன் போரின் காரணமாக அமெரிக்கா ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்ய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதில் கிரெம்ளின் மாளிகை உறுதியாக உள்ளது.
தற்போதைய நிலை
தற்போது ரஷ்யாவில் வாட்ஸ்அப் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சில டொமைன் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சிலர் விபிஎன் (VPN) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தத் தடையைத் தாண்டி வாட்ஸ்அப்பை அணுக முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதம் மற்றும் மோசடி தொடர்பான வழக்குகளில் ரஷ்ய சட்ட அமலாக்கத் துறையினருக்குத் தேவையான தகவல்களை மெட்டா நிறுவனம் வழங்க மறுத்ததும், தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்காததும் இந்தத் தடைக்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.