ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் அனுமதி வழங்கியது

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது. சர்வதேச சந்தையில் எரிசக்தி விலையை நிலைப்படுத்த இந்த 30 நாள் கால அவகாசம் வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் மற்றும் விநியோக பாதிப்புகளைச் சமாளிக்க வாஷிங்டன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்த தற்காலிக விலக்கு இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்குச் சற்று நிம்மதி அளித்தாலும், இது நாட்டின் இறையாண்மை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ஒரு வளர்ந்து வரும் வல்லரசு தனது வர்த்தக முடிவுகளுக்குப் பிற நாடுகளின் அனுமதியை எதிர்பார்ப்பது, இந்தியாவின் தன்னாட்சி வெளியுறவுக் கொள்கைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த ‘ராஜதந்திர நகர்வு’ இந்தியாவின் நீண்டகால தேசிய நலன்களில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.