மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஆசிரியர்களே பொறுப்பு: அரசு

மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகத்தின் முக்கிய கடமையென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ளபோது அவர்களது பாதுகாப்பிற்கு ஆசிரியர்களும், குறிப்பாக தலைமை ஆசிரியரும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பிற சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனுக்காக பாதுகாப்பு கட்டமைப்புகள், கண்காணிப்பு ஏற்பாடுகள், அவசரநிலை நடவடிக்கைகள் போன்றவை திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இது மாணவர்கள் சீரான முறையில் கல்வியைத் தொடரும் சூழலை உருவாக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.