போபாலில் பள்ளி மாணவனை 30 நொடிகளில் 27 முறை கத்தியால் குத்திய கொடூர சம்பவம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஸ்னூக்கர் கிளப்பில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவர்களால் 30 நொடிகளில் 27 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தன்னை அறைந்ததற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மாணவனின் மணிக்கட்டு மற்றும் விரல்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொடூரத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகளை குற்றவாளிகளே சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதால் பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய இரண்டு சிறுவர்களும் பாதிக்கப்பட்ட மாணவருடன் ஒரே பயிற்சி மையத்தில் பயின்று வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கௌதம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கூடுதல் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.