பேருந்து மீது வேன் மோதி விபத்து: 2 பேர் பலி, 11 பேர் காயம்

தெலுங்கானா மாநிலம், பெட்டா சங்கராம்பேட்டை அருகே கோலப்பள்ளியில் கோர விபத்து ஒன்று நிகழ்ந்தது. தேசிய நெடுஞ்சாலை 161ல் நேற்று அதிகாலை தனியார் சொகுசுப் பேருந்து மீது வேன் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 11 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நாராயணம்மா (50) மற்றும் சுரபம்மா (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த சொகுசுப் பேருந்து ஸ்ரீசைலத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள துளஜா பவானி கோயில் நோக்கி பயணித்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.