பிறப்பு முதல் இறப்பு வரை வரிச்சுமை! பட்ஜெட் உரையில் மத்திய அரசை வறுத்தெடுத்த அபிஷேக்

2026-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ‘மக்களுக்கு எதிரானது’ என்று கூறி, மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி கடும் தாக்குதலைத் தொடுத்தார். வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றின் இரட்டை அழுத்தத்தால் சாமானிய மக்கள் மூச்சுத்திணறி வருவதாகவும், அதே சமயம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
குழந்தைகளுக்கான பால் முதல் இறுதிச்சடங்கிற்கான ஊதுபத்தி வரை அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ள வரிச்சுமை, பொதுமக்களின் பாக்கெட்டுகளை காலி செய்வதாக அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அபிஷேக், குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்து அரசு அலட்சியமாக இருப்பதாகவும், ஆனால் வெளிநாட்டு வர்த்தகத்திற்குப் பெரும் வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரதமரின் இன்டர்ன்ஷிப் மற்றும் ஸ்காலர்ஷிப் திட்டங்களுக்கான நிதியில் பெரும் பகுதி பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதாகக் கூறிய அவர், வேலைவாய்ப்பு குறித்த அரசின் வாக்குறுதிகள் வெறும் வெற்று முழக்கங்கள் என்று விமர்சித்தார். இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினரை ‘மும்முனை வரி’ (Triple Tax) வலையில் தள்ளிவிட்டதாகவும், விவசாயக் கொள்கை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இது முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.