பிரிட்ஜில் வைத்த பழைய உணவை சாப்பிட்டதால் நேர்ந்த விபரீதம் இளைஞனின் இரு கால்கள் மற்றும் விரல்கள் அகற்றம்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேசி என்ற மாணவர், இரவில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து பிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ் மற்றும் சிக்கனை மறுநாள் காலை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சில மணிநேரங்களிலேயே அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு உடல் நீல நிறமாக மாறியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, உணவில் இருந்த பாக்டீரியா தொற்று காரணமாக ‘செப்சிஸ்’ பாதிப்பு ஏற்பட்டு சிறுநீரகங்கள் செயலிழந்தது கண்டறியப்பட்டது. உயிரைக் காப்பாற்ற அவரது இரு கால்களையும் விரல்களையும் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
செப்சிஸ் என்பது உடலில் ஏற்படும் பாக்டீரியா தொற்று தீவிரமடைந்து உயிருக்கே ஆபத்தாக முடியும் ஒரு நிலையாகும். சுமார் 26 நாட்கள் கோமா நிலையில் இருந்த ஜேசி உயிர் பிழைத்தாலும், தனது உடல் உறுப்புகளை இழந்து நிரந்தர ஊனமுற்றார். ஹோட்டல் உணவோ அல்லது வீட்டில் சமைத்த உணவோ, பழைய உணவை உண்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாகும். எப்போதும் புத்தம் புதிய உணவை உண்பதே பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.