பண்டிகை காலத்திலும் விலையில்லை சலுகை! வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாறவில்லை, வர்த்தக எரிவாயு விலை உயர்வு

பண்டிகை காலம் தொடங்கியுள்ள போதிலும், 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பொதுமக்களுக்கு எந்தவொரு சலுகையும் கிடைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதிக்கு பிறகு இதன் விலை சீராக உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) தகவல்படி, டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.853.00, கொல்கத்தாவில் ரூ.879.00, மும்பையில் ரூ.852.50, மற்றும் சென்னையில் ரூ.868.50 என எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உலகளாவிய விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு குறைவு காரணமாக இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதே விலை மாற்றமின்மைக்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், 19 கிலோ வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலையில் சற்று உயர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இதன் விலை ரூ.15.50 அதிகரித்து ரூ.1,595.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.16.5 அதிகரித்து ரூ.1,700.50 ஆகவும், மும்பையில் ரூ.15.5 அதிகரித்து ரூ.1,547.00 ஆகவும், சென்னையில் ரூ.16.5 அதிகரித்து ரூ.1,754.50 ஆகவும் உள்ளது. வர்த்தக சிலிண்டர் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் செலவுகளை நேரடியாகப் பாதிக்கும்.