நேட்டோ நாடுகளும் பங்கேற்ற நிலையில், இந்தியா மீது மட்டும் ஏன் குறை? ரஷ்யாவுடன் கூட்டுப் பயிற்சி குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியா பதிலடி

ரஷ்யாவில் நடைபெற்ற ‘ஜபாட் 2025’ ராணுவப் பயிற்சியில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து மேற்கத்திய நாடுகள் எழுப்பிய கவலைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்தியாவுடன் பல நாடுகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றதாகவும், அமெரிக்கா, துருக்கி மற்றும் ஜெர்மனி போன்ற நேட்டோ உறுப்பு நாடுகள் கூட பார்வையாளர்களாக கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்திய ராணுவத்தின் 65 பேர் கொண்ட குழுவினர் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர் என்றார். பல்வேறு நாடுகளுடன் இந்தியா ராணுவ உறவுகளையும், கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார். இதுகுறித்த விரிவான தகவல்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.