நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் இறக்குமதி வரி விதிப்பை அதிரடியாக நிறுத்தியது ட்ரம்ப் நிர்வாகம்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, அவசரகால சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகளை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி வரி விதிப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை ஏற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கூடுதல் வரிகள் வசூலிப்பது நிறுத்தப்படுவதாக அமெரிக்க சுங்கத்துறை அறிவித்துள்ளது.
இருப்பினும் வர்த்தகப் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் கீழ் புதியதாக 10 சதவீத வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். இது 15 சதவீதமாகவும் உயரக்கூடும். இந்த வரி விதிப்பு நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி 150 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், வெள்ளை மாளிகைக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.