நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: எரிந்த ரூபாய் நோட்டுகள் பரபரப்பு

டெல்லியில் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதி எரிந்த ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது வீட்டின் அருகே குப்பையில் எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்கள் அவற்றைக் கண்டெடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து விசாரணை தீவிரமாகி வருகிறது.
இந்த சம்பவம் கடந்த 14 ஆம் தேதி நடந்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்துடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் அப்போது நீதிபதி வீட்டில் மூட்டைகள் நிறைந்த ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபத்யாயா, யஷ்வந்த் வர்மாவின் செல்போன் அழைப்பு விவரங்கள், இணையத்தள பயன்பாடு உள்ளிட்ட தகவல்களை வழங்கும்படி டெல்லி காவல்துறையை கேட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தன்னுடைய வீட்டு பணத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாக விளக்கம் அளித்துள்ளார். விசாரணை முடியும் வரை அவருக்கு எந்தப் பொறுப்பும் ஒதுக்க வேண்டாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.