‘நிர் பயாவைப் போல் இறந்திருந்தால் தான் நம்புவீர்களா?’ – உன்னாவ் பாதிப்பு; குல்தீப் சிங்கிற்கு ஜாமீன் மறுப்பு!

உன்னாவ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாஜக பிரமுகர் குல்தீப் சிங் செங்கருக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், செங்கரின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த 3 மாதங்களுக்குள் முடிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த முடிவுக்குப் பின், பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்கக் கூறியதாவது: “நீதிமன்றத் தீர்ப்பில் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் என் தந்தை இனி திரும்ப வரப்போவதில்லை. செங்கரின் சகோதரர்களும், காவல்துறையினரும் இணைந்து என் தந்தையைக் கொன்றுவிட்டனர்.”
சமூகத்தின் மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், “ஒருவேளை நான் ‘நிர் பயா’வைப் போல இறந்திருந்தால், எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அனைவரும் எளிதில் நம்பியிருப்பார்கள். நான் உயிரோடு இருப்பதால், கடந்த 8 ஆண்டுகளாக நான் ஒரு பாதிக்கப்பட்டவள் என்பதை நிரூபிக்கப் போராடிக் கொண்டிருக்கிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
தனது தந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், குல்தீப் சிங் செங்கருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.