தோனி இருக்கும் வரை மைதானம் மஞ்சளாகவே இருக்கும் – ஜாஹிர் கான்

லக்னோ: 2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கான எதிர்பார்ப்பு சூடுபிடித்திருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாஹிர் கான், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அவரது அணிக்கு இடையேயான போட்டி குறித்து மனம் திறந்தார்.
பத்திரிக்கையாளர் ஒருவர், லக்னோ அணியின் நீல ஜெர்சிகள் மைதானத்தில் அதிகமாக காணப்படுமா? என கேள்வி எழுப்பியதற்கு ஜாஹிர் கான், “தோனி இருக்கும் வரை மைதானங்களை மஞ்சள் நிறம் ஆக்கிரமித்தே இருக்கும். அவர் அனைவராலும் விரும்பப்படுகிறார். அவர் விளையாடும் வரை இந்த நிலைமை மாறவே மாட்டாது” என்று கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் படையெடுப்பு, அவரது ரசிகர்கள் தோனியின் மீதான அன்பை காட்டுகிறது. கடந்த ஆண்டு, லக்னோவின் அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி 9 பந்துகளில் 28 ரன்களை விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த முறையும் தோனி அதே மாயாஜாலத்தை படைக்கப் போகிறார் என்பதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.