டிரம்பின் புதிய விசா கொள்கை: ஊழியர்களை 24 மணிநேரத்தில் திரும்பச் சொல்கிறது அமெரிக்க நிறுவனங்கள் ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய H-1B விசா கொள்கையால், வெளிநாட்டு ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். புதிய விதிகளின்படி, H-1B விசாவுக்கு ஒரே தவணையாக ₹89 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும், இது ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், மெட்டா, மைக்ரோசாஃப்ட், ஜேபி மோர்கன் மற்றும் அமேசான் போன்ற பெரிய அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் வெளிநாட்டு ஊழியர்களை 24 மணி நேரத்திற்குள் அமெரிக்கா திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளன. புதிய விதிகள் அமலாகும் முன் அவர்களின் விசா நிலையைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இந்திய ஊழியர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை குறைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், வெளிநாட்டில் உள்ள H-1B விசா வைத்திருப்பவர்கள் உடனடியாகத் திரும்பவோ அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கிடையில், டிரம்ப்பின் முடிவை எதிர்த்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, திறமையான ஊழியர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற டிரம்ப் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.