டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ₹90 ஐ கடந்தது! இந்திய ரூபாயின் சரிவு பற்றி உதய் கோடக் அதிர்ச்சி தகவல்

இந்திய ரூபாய்க்கு புதன்கிழமை ஒரு வரலாற்றுச் சரிவு நாளாக அமைந்தது. முதல்முறையாக, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹90-ஐ கடந்து, தனது எல்லா காலத்திற்குமான குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது. இந்த வீழ்ச்சி பங்குச் சந்தை மற்றும் பொதுமக்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில், பிரபல வங்கியாளர் உதய் கோடக், அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து பணத்தை வெளியேற்றுவதே இதற்குக் காரணம் என்று கூறி, “அந்நிய முதலீட்டாளர்கள் புத்திசாலிகள்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
கோடக் மேலும் கூறுகையில், ₹90-ஐ ரூபாய் தொட்டதற்கு FPI மற்றும் FDI முதலீட்டாளர்கள் பணத்தை வெளியேற்றுவதுதான் காரணம். இப்போதைக்கு அந்நிய முதலீட்டாளர்கள் புத்திசாலிகளாகத் தெரிகிறார்கள். எனவே, இந்திய நிறுவனங்கள் தங்கள் இயல்பான எல்லையிலிருந்து வெளியே வந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்நியச் செலாவணி வல்லுநர்கள் கூற்றுப்படி, ரிசர்வ் வங்கியின் தீவிர தலையீடு இல்லாவிட்டால், ரூபாயின் மதிப்பு ₹91-92 வரையிலும் சரியக்கூடும்.