டாக்டர் சீட்டுக்காக விபரீதம்: நீட் தேர்வில் தோல்வி பயம்.. வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் மருத்துவக் கனவு ஒரு இளைஞனை விபரீத முடிவுக்கு தள்ளியுள்ளது. நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்று எப்படியாவது மருத்துவர் ஆக வேண்டும் என்ற வெறியில், 20 வயது மாணவர் ஒருவர் தனது சொந்தக் காலைத் தானே துண்டித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
முதலில், அடையாளம் தெரியாத நபர்கள் தனது தம்பியைத் தாக்கி காலின் ஒரு பகுதியை வெட்டிவிட்டதாக அந்த மாணவரின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாணவரின் டைரியைக் கைப்பற்றியபோது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
விசாரணையில் தெரிந்த உண்மைகள்:
- அந்த மாணவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வியடைந்து கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
- 2026-ல் எப்படியாவது மருத்துவ சீட் வாங்க வேண்டும் என அவர் தனது டைரியில் எழுதியுள்ளார்.
- பொதுப் பிரிவில் (General Category) மதிப்பெண் குறைந்தால் சீட் கிடைக்காது என்பதால், மாற்றுத்திறனாளி (PH) ஒதுக்கீட்டின் கீழ் சலுகை பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மருத்துவ சீட்டுக்காகத் தனது உடல் உறுப்பையே சிதைத்துக் கொண்ட மாணவரின் செயல், நீட் தேர்வால் மாணவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான மன அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது.