ஜென்சோல் நிறுவனம் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல் தேவை: இயக்குநர் ராஜேஷ் ஜெயின் ராஜினாமா

புதுடெல்லி: புதுப்பிக்கும் ஆற்றல் துறையில் செயல்படும் ஜென்சோல் எஞ்சினியரிங் நிறுவனத்தின் சுயாதீன இயக்குநர் ராஜேஷ் ஜெயின் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மார்ச் 13ஆம் தேதி தேசிய பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தில் (NSE) தாக்கல் செய்யப்பட்ட தனது ராஜினாமா கடிதத்தில், ஜெயின் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்தார். “நிறுவனத்தின் வளர்ச்சிக் கோணத்தில், வெகுவாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் உள்ளன. நிறுவன முன்னணியாளர்கள் வணிக வளர்ச்சியில் கவனம் செலுத்தினாலும், தகுந்த வழிகாட்டி அல்லது ஆலோசகர் தேவைப்படும் நிலை உருவாகியிருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ராஜினாமா, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) அங்கித் ஜெயின் சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்த சில வாரங்களுக்குப் பிறகு வந்துள்ளது. புதிய CFO ஆக ஜபிர்மஹெண்டி அகா நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமன அறிவிப்பில், ஜென்சோல் நிறுவனத்தின் தலைவர் அன்மோல் சிங் ஜாகி, “நாங்கள் கடினமான கட்டத்தைக் கடந்து செல்கிறோம்; இதை சமாளிக்க ஜபிர் சிறந்த தேர்வாக இருப்பார்” என்று கூறினார்.
நிறுவனத்தின் நிதிச் சுமையை சமாளிக்க, ஜென்சோல் நிறுவனம் ரூ.600 கோடி நிதி திரட்டும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை விற்பனை செய்வதோடு, ஒரு துணை நிறுவனத்தையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ரெஃபெக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜென்சோலிடம் இருந்து 2,997 மின்சார நான்கு சக்கர வாகனங்களை வாங்க உள்ளதாக ஜனவரி 16 அன்று அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் படி, ரெஃபெக்ஸ் நிறுவனம் இந்த வாகனங்களை ப்ளூஸ்மார்ட் நிறுவனத்திற்கு வாடகைக்கு வழங்க உள்ளது.