சென்னையில் ஐ.பி.எல் போட்டிக்கான போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 23, 28 மற்றும் ஏப்ரல் 5, 11, 25, 30 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த நாள்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
கார் பாஸ் வைத்திருப்பவர்கள் ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுவர். கார் பாஸ் இல்லாதவர்கள், கத்தீட்ரல் சாலையில் இருந்து ஆர்.கே. சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து, மெரினா கடற்கரை சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். பின்பு சுரங்க வழிப்பாதை மூலம் மைதானத்தை அடையலாம்.
டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அண்ணா சாலை வழியாக வாலாஜா சாலையை அடைந்து பயணிகளை இறக்கி விடலாம். சிற்றுந்து, எம்.டி.சி பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் வாலாஜா சாலையில் அனுமதிக்கப்படுவன. பொதுமக்கள் எம்.ஆர்.டி.எஸ் சேப்பாக்கம் ரயில் நிலையம் அல்லது அரசு எஸ்டேட் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.