சுனிதா, வில்மோர் நலமாக உள்ளனர் – நாசா தகவல்

விண்வெளியில் 9 மாதங்களை கழித்த பிறகு பூமிக்கு திரும்பிய இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் இருவரும் நலமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி திரும்பிய நிலையில், அவர்களின் உடல்நிலையை பரிசோதிக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். நீண்ட கால விண்வெளிப் பயணம் காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் நீண்ட காலம் செலவிடுவதைத் தொடர்ந்து வீரர்கள் பூமியின் ஈர்ப்புவிசைக்கு பழகும் வரை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்படுவதை வழக்கமாக நாசா மேற்கொள்கிறது.