சீனாவில் பயணம் செய்யும் தைவானியர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – எச்சரிக்கை

தைவான் குடிமக்கள் சீனாவுக்கு பயணம் செய்யும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ஸ்ட்ரெயிட்ஸ் எக்ஸ்சேஞ்ச் பவுண்டேஷன் (SEF) எச்சரித்துள்ளது.
அண்மையில் மூன்று தைவான் குடிமக்கள் சீனாவில் கைது செய்யப்பட்டு, மேலும் ஒருவர் மாயமாகியதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SEF செயலாளர் லூவோ வென்-சியா கூறியதாவது: சீனாவில் ஜனநாயகம், சட்டம் மற்றும் தெளிவான உரிமைகள் மற்றும் நடைமுறைகள் இல்லாததால், தைவான் குடிமக்கள் தொடர்பான சம்பவங்களை கணிக்கவோ, சரி செய்யவோ கடினமாக இருக்கிறது.
ஒரு தைவான் தொழிலதிபரும் அவரின் மகனும் வூஹானில் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் ஒருவர் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஜூஹாயில் காணாமல் போனதாகவும் தகவல் கிடைத்துள்ளது. காணாமல் போன நபரின் குடும்பத்தினரை சீன சிறையில் உள்ள ஒரு கைதி தொடர்புகொண்டு, அந்த நபர் சிறையில் உள்ளதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், குவாங்டோங் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பணியமர்த்தப்பட்ட தைவான் பேராசிரியரின் வீட்டு வாடகை ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
SEF செயலாளர் லூவோ, தைவான் குடிமக்கள் சீனாவில் கைது செய்யப்படும்போது தகவல் வழங்க வேண்டிய ‘குற்றங்களை எதிர்க்கும் மற்றும் நீதிமுறையில் இணைந்து செயல்படும் ஒப்பந்தம்’ எனும் உடன்படிக்கையை சீனா பின்பற்றவில்லை என குற்றம் சாட்டினார். இந்த வெளிப்படைத்தன்மையற்ற நடவடிக்கை சீனாவின் நம்பகத்தன்மையை பாதிப்பதாக அவர் கூறினார்.
இருப்பினும், தைவான் ஜனாதிபதி வில்லியம் லாய் பதவி வகித்ததிலிருந்து, சீனாவுடன் திறந்த, கட்டமைக்கப்பட்ட மற்றும் சமமான உரையாடலை தொடர விரும்புவதாக SEF தெரிவித்துள்ளது.