சாலைகளை தோண்டும்போது அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வழிகாட்டு நெறிமுறைகள் கோரி வழக்கு
March 13, 2026

சென்னை கோட்டூர் புரம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படுவதால் குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இது குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. முறையான திட்டமிடல் இன்றி சாலைகள் தோண்டப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயங்களை சுட்டிக்காட்டி இந்த விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.