சஹாரா மோசடி: பண மோசடியை அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை; வெளிச்சத்திற்கு வந்த பகீர் தகவல்கள்

சஹாரா குழுமம் பொதுமக்களிடமிருந்து திரட்டிய பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை (ED) கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், சஹாரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அனில் வி. ஆபிரகாம் மற்றும் சொத்து தரகர் ஜிதேந்திர பிரசாத் வர்மா ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். பொன்சி திட்டம் மூலம் பெறப்பட்ட நிதி, ரகசியமான பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் வழியாக திசை திருப்பப்பட்டதாக அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெபாசிட்தாரர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தராமல், கணக்குகளில் முறைகேடு செய்து மோசடியை சஹாரா மறைத்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதற்கிடையில், செபியிடம் உள்ள ₹24,000 கோடியிலிருந்து ₹5,000 கோடியை சஹாரா டெபாசிட்தாரர்களுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்காக நீண்ட காலமாக காத்திருக்கும் பல மில்லியன் முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.